×

முத்துப்பேட்டை அருகே சாவிலும் இணைபிரியா தம்பதி மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் மயங்கி சாவு: ஒரே சிதையில் உடல்கள் தகனம்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகையன் (64). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி இந்திரா (57). இவர்களுக்கு திருமணமாகி 37 வருடங்களாகிறது. பிரபு (36) என்ற மகனும், விஜயா (32) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.இந்நிலையில் இந்திராவுக்கு கல்லீரலில் பிரச்னை காரணமாக கடந்த சில மாதங்களாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் முருகையனும் சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்னைகளால் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு இந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நேற்று அவரது இறுதி சடங்கு நடந்தது. அவரது இறுதி சடங்குக்கு திருவாரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகையனை உறவினர்கள் அழைத்து வந்தனர். மனைவியின் சடலத்தை பார்த்த முருகையன் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது திடீரென மயங்கி விழுந்து, அதே இடத்தில் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இருவரது சடலங்களையும் ஒரே சிதையில் அருகருகே வைத்து தகனம் செய்தனர். இச்சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post முத்துப்பேட்டை அருகே சாவிலும் இணைபிரியா தம்பதி மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் மயங்கி சாவு: ஒரே சிதையில் உடல்கள் தகனம் appeared first on Dinakaran.

Tags : Muthuppet ,Murugayan ,Perumal Koil Street, Udayur ,Muthupet, Tiruvarur district ,Muthupet ,
× RELATED கந்தப்பரிச்சான் ஆறு குறுக்கே ₹4.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்